கோவையில் 10 பேருக்கு பன்றி காய்ச்சல்
கோவை: கோயம்புத்தூரில் ஒரே நாளில் மூன்று மாணவிகள் உட்பட 10 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகை மிரட்டி வரும் பன்றி காய்ச்சல் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை இந்த நோயக்கு 208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சென்னையை சேர்ந்த மூவர் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூரை தவிர்த்து வேறு எங்கும் பன்றி காய்ச்சல் பாதிப்பு அவ்வளவாக இல்லை.
சமீபத்தில் கோயம்புத்தூர், கணபதி பகுதியில் இருக்கும் ஒரு பள்ளி மாணவிக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவி படித்து வந்த பீளமேடு பகுதியில் இருக்கும் பள்ளியில் சுகாதார துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகளுடன் இருந்தவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அவை பரிசோதனைக்கு அனுப்பட்டன. மேலும் பலர் மருத்துவமனையில் காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது மாதிரியும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில் 10 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் மூன்று பேர் அந்த பள்ளியை சேர்ந்த மாணவிகள் என்பது தெரிய வந்துள்ளது. இது தவிர கர்ப்பிணி கல்லூரி பேராசிரியர் ஒருவருக்கும் பன்றி காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்களில் பாதி பேர் மருத்துவமனையிலும், மீதி பேர் வீட்டிலும் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், சளி, காய்ச்சல் இருக்கும் மாணவ, மாணவியர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்து பரிசோதனை செய்யும்படி பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
2 நாளில் புதிய சோதனை கூடம்...
அதே சமயத்தில் இன்னும் இரண்டு நாட்களில் கோயம்புத்தூரில் புதிய பரிசோதனை மையம் திறக்கப்படும் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்வைன் பாதிப்பு 3,000 தாண்டியது...
நேற்று ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதும் 186 பேருக்கு இந்த காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 9 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.
அதிகபட்சமாக டெல்லியில் 41 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியை தொடர்ந்து மகாராஷ்டிராவி்ல் 34, கர்நாடகத்தில் 29, குஜராத்தில் 23 பேருக்கு பன்றி காய்ச்சல் பரவியுள்ளது.
கேரளாவில் 16, தமிழகத்தில் 12 பேருக்கும் ஸ்வைன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,095 ஆக உயர்ந்துள்ளது.