திருச்சி உள்ளிட்ட 7 இந்திய நகரங்களில் 'ஐஐஎம்'கள்!
டெல்லி: தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் சில மாநிலங்களில் மேலும் 7 இந்திய நிர்வாகவியல் கழகங்களை (ஐஐஎம்) தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு ஐஐஎம்மும் முழுமையாக செயல்பட தலா ரூ. 250 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், ஹரியானா, சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 7 மாநிலங்களில் இந்த ஐஐஎம்கள் அமைக்கப்படும்.
இப்போது தமிழகத்தில் ஐஐஎம் இல்லை. இந்த மையத்தில் சேர்ந்து படிக்க விரும்புவோர் அருகாமையில் உள்ள பெங்களூருக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது. பெங்களூரு தவிர, கோழிக்கோடு, அகமதாபாத், இந்தூர், கொல்கத்தா, லக்னோ மற்றும் ஷில்லாங் ஆகிய நகரங்களில் மட்டுமே ஐஐஎம்கள் உள்ளன.
எனவே நாட்டில் பரவலாக மேலும் 7 ஐஐஎம்கள் அமைப்பது தொடர்பாக 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்போதுதான் மத்திய அமைச்சரவை இதற்கான ஒப்புதலை வழங்குகிறது.
தமிழகத்தில் திருச்சியிலும், ஜார்க்கண்ட்டில் ராஞ்சி, சட்டீஸ்கரில் ரெய்ப்பூர், ஹரியானாவில் ரோதக் ஆகிய இடங்களிலும் ஐஐஎம்கள் அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் மாநிலங்களில் இன்னும் இடம் தேர்வாகவில்லை.