ஒரு வழியாய் சொத்து விவரம் வெளியிட முன் வந்த நீதிபதிகள்!
டெல்லி: நீண்ட சர்ச்சைகளுக்குப் பின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தங்களது சொத்து விவரங்களை வெளியிட ஒருவழியாக முன் வந்துள்ளனர்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த நீதிபதிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
நீதிபதிகளும் சொத்துக் கணக்கை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று கருத்து நாடு முழுவதும் வலுத்து வருகிறது. இது தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒருவர் சொத்து விவரம் கேட்டு வழக்குத் தொடர அதற்கு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது.
இதையடுத்து மத்திய அரசு ஒரு சட்ட மசோதாவை தயார் செய்தது. கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இது முன் வைக்கப்பட்டது. அதில், நீதிபதிகள் சொத்துக்கள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்யலாம். ஆனால் அவை ரகசியமாகவே வைக்கப்படும், பகிரங்கமாக அறிவிக்கப்பட மாட்டாது என்று இடம் பெற்றிருந்த அம்சத்திற்கு நாடாளுமன்றத்தில் மிகக் கடுமையான எதிர்ப்பை எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்தின.
இதையடுத்து மசோதாவைத் தாக்கல் செய்த உடனேயே அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டார் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி.
இந் நிலையில் பஞ்சாப் உயர் நீதிமன்ற நீதிபதி கண்ணன், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஷைலேந்திர குமார் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை அடுத்தடுத்து வெளியிட்டு பொறுப்புணர்வை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து இந்த நீதிபதிகள் சுய விளம்பரத்துக்கு அலைவதாகக் கூறி சர்ச்சையி்ல் சி்க்கினார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன்.
இந்த சம்பவங்களால் நீதித்துறையின் நிலைப்பாடு குறித்து தேசிய அளவில் விவாதங்களும் கேள்விகளும் எழுந்தன. நீதிபதிகளும் மற்ற உயர் பதவிகளில் இருப்பவர்களைப் போன்றே மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள் என்று மூத்த அரசியல்சட்ட நிபுணர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் ஏற்பட்ட நெருக்கடியையடுத்து தங்கள் சொத்து விவரங்களை நீதிபதிகள் வெளியிடுவார்கள் என்று தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
சொத்து விவரங்களை உச்ச நீதிமன்ற இணையதளத்தில் நீதிபதிகள் வெளியிடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தலைமை நீதிபதியுடன் மற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்திய பின் சொத்து விவரங்களை தாக்கல் செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்தத் தீர்மானத்தில் அனைத்து நீதிபதிகளும் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்டால் மட்டுமே அது நடைமுறைக்கு வரும். இதில் ஒரிரு நாட்களில் அனைத்து நீதிபதிகளும் கையெழுத்திட்டுவிடுவர் என்று தெரிகிறது.