பால் விலை உயர்வு-அதிமுக போராட்டம்: ஜெ.
சென்னை: பால் விலை உயர்வைக் கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் அதிமுக சார்பில், 29ம் தேதி சனிக்கிழமை போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா இன்று விடுத்துள்ள அறிக்கை:
ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் பாலின் விலையை மூன்றாவது முறையாக, குறைந்தபட்சம் லிட்டருக்கு 2 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 4 ரூபாய் வரை உயர்த்தி தி.மு.க. அரசு ஆணையிட்டுள்ளது.
அண்மையில் அறிவிக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை உயர்வால் அனைத்துப் பொருட்களும் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு ஏறிவிட்ட சூழ்நிலையில், பாலின் விலை உயர்வு காரணமாக, டீ, காபி மற்றும் பாலின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் விலைகள் மீண்டும் உயரக்கூடிய சூழ்நிலை உள்ளது. இதைக் காரணம் காட்டி, தனியார் பால் நிறுவனங்களும் பாலின் விலையை உயர்த்தக் கூடும்.
விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், விலைவாசி கட்டுக்கடங்காமல் செல்வதற்குரிய நடவடிக்கைகளைத் தான் தி.மு.க. அரசு எடுத்து வருகிறது.
எனவே, விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்தும், அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் மற்றும் இதர மளிகை பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் பால் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் வடசென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் வருகின்ற 29-ந்தேதி சனிக்கிழமை காலை 9.30 மணி அளவில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஆர்ப்பாட்டம், கழக மருத்துவ அணித்தலைவரும், கழக நாடாளுமன்ற குழு துணைத் தலைவருமான டாக்டர் மைத்ரேயன் எம்.பி., தலைமையிலும், வட சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் பி.கே. சேகர்பாபு எம்.எல்.ஏ. முன்னிலையிலும் நடைபெறும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.