ஓசி மின்சாரம்-ஆண்டுக்கு நஷ்டம் ரூ.1140 கோடி
சென்னை: விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 1,140 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருவதாக அசோசெம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அசோசியேட் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ரிஸ் எனப்படும் அசோசெம் அமைப்பு வெளியி்ட்டுள்ள செய்தியில்,
தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தால் அந்த துறை மிகவும் சிக்கலான நிலையை எட்டியுள்ளது. எங்கள் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தமிழகத்துக்கு இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ. 1,140 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஒரு நாளுக்கு 14 மணி நேரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் 3.14 லட்சம் பம்புசெட்டுகள் இயங்கி வருகின்றன. இந்த இலவச மின்சாரம் மற்ற பொருட்களின் மூலம் கிடைக்கும் வருமானங்களை விழுங்கி விடுகிறது.
மின்சார துறை திவாலாகும் நிலைக்கு வந்துவிட்டால், அதை மீட்கும் பணத்தை யார் கொடுப்பது. இதனால் தமிழக அரசு தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை குறைக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்.
விவசாயிகள் பலரும் இலவச மின்சாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் மற்ற தேவைகளுக்கும் இதை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அவர்கள் மின்சாரம் இலவசம் என்பதால் தேவையில்லாமல் அதிக தண்ணீரை பூமியின் ஆழத்தில் இருந்து எடுத்து நீரோட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.
தொழிற்சாலைக்கு கூடுதல் மின்சாரம்...
ஆனால், அதே நேரத்தில் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் விலை அண்டை மாநிலங்களை விட அதிகமாக இருக்கிறது. இதனால் தமிழகத்தை சேர்ந்த தொழி்ற்சாலைகள், மகராஷ்டிரா, ஆந்திரா ஆகியவற்றுடன் போட்டி போட முடியவில்லை.
இவர்கள் அதிக விலை கொடுத்தாலும் மின்சாரம் 24 மணி நேரமும் கிடைப்பதில்லை. தமிழகத்தில் தற்போது 14 ஆயிரத்து 300 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதை மேலும் 4 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும் திட்டங்கள் செயலில் உள்ளன.
தென் மாநிலங்களில் தமிழகம் தான் மின்சார தேவையில் சிறப்பாக இருக்கிறது. அங்கு 2008-09ம் ஆண்டின் முதல் காலாண்டில் 3.8 சதவீதம் பற்றாக்குறை உள்ளது. மற்ற மாநிலங்களில் இது மிகவும் அதிகம் என்றார்.
இலவசம் மின்சாரம் வேண்டாம்...
இதையடுத்து மாநில அரசு மின்சாரம் அனைவருக்கும் பகிர்ந்து வழங்க வேண்டும். சிறிய விசைத்தறி நிறுவனங்களுக்கு சலுகை விலையில் அளிக்க வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்காமல் குறைந்த விலையில் மின்சாரம் வழங்கலாம்.
தமிழகத்தில் இருக்கும் கார்பெரட் நிறுவனங்கள் தங்கள் கிடைத்திருக்கும் சலுகையை பயன்படுத்தி காற்றாலை, சூர்ய மின்சாரம் போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
பட்டு தொழிலுக்கு பின்னடைவு...
இங்குள்ள பட்டு தயாரிப்புகளும் இந்தியா மற்றும் சர்வதேச பட்டுக்களுடன் போட்டியிட முடியாத நிலையில் இருக்கிறது. இவர்களுக்கு மல்பேரி பட்டு, சில்வர் ஜரிகை போன்ற மூலப்பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
திறமையான தொழிலாளர்கள் இல்லாதது, கூலி குறைவு, மார்கெட்டிங் வசதியின்மை போன்றவை பட்டு தொழிலுக்கு தமிழகத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.