விநாயகர் சிலைகளுக்கு ஏர்வாடி தர்ஹா சார்பில் மாலை
கீழக்கரை: ஏர்வாடியில் ஊர்வலத்தில் கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தர்ஹா சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
ஏர்வாடி அருகேயுள்ள வெட்டமுனை,தொத்தமகன்வாடி , நாச்சியம்மைபுரம் உள்ளிட்ட ஊர்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் டிராக்டர்களில் விநாயகர் சிலைகள் எடுத்து வரப்பட்டு மேள தாளங்கள் முழங்க ஊர்வலம் நடந்தது. தர்ஹா பகுதியில் வந்தடைந்த இந்த ஊர்வலத்திற்கு தர்ஹா நிர்வாகம் சார்பில் விநாயகர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு சின்ன ஏர்வாடி கடலில் சிலைகள் கரைக்கப்பட்டது. இந்து முன்னணி நிர்வாகி பால்ச்சாமி,சுடலைமாடன் உள்ளிட்டோர் ஊர்வலத்தில் கலந்துக் கொண்டனர்.
விநாயகர் சிலை ஊர்வலம் குறித்து ஏர்வாடி தர்ஹா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் அமீர் ஹம்சா கூறியதாவது , "ஏர்வாடி தர்ஹா மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது .இந்துக்கள் விழாக்களில் முஸ்லீம்களும், முஸ்லீம்கள் விழாக்களில் இந்துக்களும் சகோதர பாசத்துடன் கலந்து கொள்வது சிறப்பு அம்சமாகும். தர்ஹா நிர்வாகம் சார்பில் விநாயகர் சிலைக்கு மரியாதை செய்வது மத ஒற்றுமையையும் , மனித நேயத்தையும் வள்ர்க்கிறது" என்றார்.