அவதூறு-எஸ்.வி.சேகருக்கு சசிகலா நோட்டீஸ்
கும்பகோணம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா குறித்து அவதூறு பேசியதாக நடிகரும் எம்எல்ஏவுமான எஸ்.வி சேகருக்கு சசிகலாவின் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கும்பகோணம் வந்த எஸ்.வி.சேகர் இதைத் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நான் அவதூறாக பேசியதாக சசிகலாவின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அவர் மீது நான் அவதூறு கூறவில்லை.
சசிகலா அதிமுகவின் நிர்வாகக் குழுவில் உள்ளார். அவர்களது உறவுக்காரர்களின் மிடாஸ் மது ஆலையில் தான் தமிழக அரசு 40 சதவீதம் மது வகைகளை கொள்முதல் செய்கிறது.
தமிழக அரசு கவிந்து விட வேண்டும் என்ற சொல்பவர்கள், சசிகலா குழுமத்தின் மிடாஸ் சரக்குகளை தமிழக அரசுக்கு கொடுக்க மாட்டேன் என்று சொல்ல வேண்டும்.
அதிமுகவைப் பற்றி முன்பே தெரிந்திருந்தால் அங்கு சென்றிருக்க மாட்டேன். என்னை கட்சியிலிருந்து நீக்கியது குறித்து அதிமுக சபாநாயகருக்கு எந்தவித கடிதமும் அனுப்பவில்லை.
அரசியலைப் பொறுத்தவரை இடைத்தேர்தலில் எதிர்பார்த்ததை விட அதிக ஓட்டு பெற்று ஆளுங்கட்சி கூட்டணி 5 இடங்களிலும் அபார வெற்றி பெற்றுள்ளது.
ரசிகர்களுக்கு பிடித்தமானதை செய்தால் தான் சூப்பர் ஸ்டாராக முடியும். அதுபோல் மக்களுக்கு என்ன வேண்டுமோ, அதை சரியாக சொன்னால்தான் ஏற்றுக் கொள்வார்கள்.
அதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பு வேண்டுகோளை மக்கள் ஏற்கவில்லை. தேர்தலை புறக்கணிப்பதாக சொன்னது கோழைத்தனமான முடிவு என்றார்.