தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்கர் அப்பீல் செய்ய அனுமதி
சென்னை: தோட்டாக்கள் பொருத்திய துப்பாக்கியுடன் விமானம் ஏற வந்ததாக கைது செய்யப்பட்ட அமெரிக்கருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய வசதியாக தண்டனை செப்டம்பர் 23ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் லேரி செல்மேயர் (58). இவர் கடந்த ஜூன் மாதம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அவரது உடமைகளை சோதித்தபோது அதில் தோட்டாக்கள் பொருத்தப்பட்ட துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து லேரி கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆலந்தூர் நீதித்துறை நடுவர் மன்றம், ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. ரூ. 5000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று அபராதத் தொகையை செலுத்தினார் லேரி. மேலும், தான் அப்பீல் செய்யவுள்ளதாகவும், அதற்கு வசதியாக தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்ற நீதிபதி ராமநாதன், தீர்ப்பை செப்டம்பர் 23ம் தேதி வரை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு செஷன்ஸ் கோர்ட்டை லேரி அணுகவுள்ளதாகவும், அங்கு நிவாரணம் கிடைக்காவிட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகவுள்ளதாகவும் லேரியின் வழக்கறிஞர் கணேஷ் தெரிவித்தார்.
ஏற்கனவே லேரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது எழும்பூரில் தங்கியுள்ளார் லேரி.
கடந்த மே மாதம் அமெரிக்காவிலிருந்து டெல்லி வந்து அங்கிருந்து சென்னை வந்தார் லேரி. மூட்டு வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் வந்திருந்தார். மீண்டும் அமெரிக்கா செல்ல ஜூன் 11ம் தேதி சென்னை விமான நிலையம் வந்தார். அப்போதுதான் துப்பாக்கியுடன் பிடிபட்டுக் கைதானார். அவரிடமிருந்து 35 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.