பஞ்சாயத்துக்களில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு
டெல்லி: கிராமப் பஞ்சாயத்துக்களில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி இத்தகவலைத் தெரிவித்தார்.
அரசியல் சாசன பிரிவு 243 டி பிரிவின்படி பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு அளிக்க வகை செய்கிறது. இதில் உள்ள வரம்பை 50 சதவீதமாக உயர்த்துவதென முடிவு செய்யப்பட்டது.
கடந்த ஜூன் 4-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பஞ்சாயத்து அமைப்புகளில் மகளிர்க்கு 50 சதவீத ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட திருத்தம் மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டார்.
பெண்கள் பாலினம், வகுப்பு, சாதி உள்ளிட்ட பேதங்களால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இதைப் போக்க வேண்டுமெனில் பஞ்சாயத்து அமைப்புகளில் மகளிர்க்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
தற்போது பீகார், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 50 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இந்த மாநிலங்கள் அனைத்தும் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்கள் ஆகும்.
2010-ம் ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாயத்து தேர்தலில் இதை நடைமுறைப்படுத்தப் போவதாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மற்ற மாநிலங்களிலும் இதை அமல்படுத்த சட்ட மசோதா கொண்டு வரப்படவுள்ளது. இதற்கான முதல் நடவடிக்கையே அமைச்சரவையின் ஒப்புதல் ஆகும்.