ஸ்வைன்: மகா. மூவர் பலி-89 ஆக உயர்வு
டெல்லி: பன்றி காய்ச்சல் நோய்க்கு மகாராஷ்டிராவில் மூவரும், கர்நாடகாவில் ஒருவரும் என நேற்று மொத்தம் நான்கு பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது.
ஸ்வைன் ப்ளு எனப்படும் பன்றி காய்ச்சல் நோய்க்கு இதுவரை உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்து 55 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,595 பேர் மரணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக பிரேசலில் 584, அமெரிக்காவில் 525 பேர் பலியாகி இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது இந்த நோய் இந்தியாவிலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நேற்று மட்டும் இந்தியாவில் மூன்று பேர் இந்த நோய்க்கு பலியாகி உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் அறிகுறிகளுடன் பிஜப்பூர் பிஎல்டி மருத்துவ கல்லூரி மருத்துவனையில் சுனந்தா கன்ட்வால் என்ற 16 வயது பெண் சேர்க்கப்பட்டார். இவர் கடந்த 24ம் தேதி பலியானார். தற்போது அவர் பன்றி காய்ச்சலால் மரணமடைந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாசிக்கில் 2, மும்பையில் 1...
மகாராஷ்டிராவின் நாசிக் நகரை சேர்ந்த பூர்வா அமோல் ஜோஷி (23), தீபளி ஷின்டே (20) ஆகிய இருவரும் நாசிக் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் பன்றி காய்ச்சலுக்கு பலியாகி இருப்பதாக மகாராஷ்டிரா சுகாதார துறை அறிவித்துள்ளது.
மும்பையில் டி ஒய் படீல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 39 வயதான ஷாயிக் என்பவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்ததாக நாவி மும்பையின் தலைமை சுகாதார அதிகாரி தீபக் பரோப்காரி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 89 ஆகவும், மகாராஷ்டிராவில் 47 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும், கர்நாடகாவில் 20, குஜராத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் மூன்றும் பேரும், சட்டீஸ்கர், டெல்லியில் தலா இரண்டு பேரும், கேரளா, கோவா, ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் தலா ஒருவரும் எச்1என்1 வைரசுக்கு இறையாகியுள்ளனர்.