தமிழகத்தின் ஐடி ஏற்றுமதி 29 சதவீதம் அதிகரிப்பு
தமிழ்நாடு தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப அகாடமியின் பயிற்சி முகாம் மதுரையில் இன்று தொடங்கியது. இதை சென்னையிலிருந்தபடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், பொருளாதார மந்த நிலை நீடித்து வருகிற போதும், தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன.
தமிழ்நாடு தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப அகாடமி மூலம் தொழில் கல்வி ஆசிரியர்கள் 5000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புப் பெறுவதற்கேற்ற தகுதிகளை மாணவர்களிடத்தில் புகுத்துவார்கள்.
இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ. 6 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கியுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தின் சமீபத்திய நடைமுறைகளை மாணவர்கள் அறிந்து கொள்ள இது நல்ல வாய்ப்பாகும்.
தனி தகவல் தொழில்நுட்பக் கொள்கையை அறிவித்த முதல் மாநிலம் தமிழகம்தான். 1997ல் இது அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்றார் முதல்வர்.