சுபிக்ஷா சொத்துக்களை ஜப்தி செய் நீதிமன்றம் அனுமதி!
சென்னை: சுபிக்ஷா நிறுவனத்தின் சொத்துக்களை ஜப்தி செய்ய கோடக் மகிந்திரா நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை உள்பட இந்தியா முழுக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கிய சில்லறை விற்பனை மையமான சுபிக்ஷா, நிதி நெருக்கடி காரணமாக இழுத்து மூடப்பட்டன. 16,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை இழந்தனர்.
சுபிக்ஷாவுக்கு பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலும் ரூ. 800 கோடிக்கு மேல் கடன்கள் உள்ளன. இதுதவிர வாடகை பாக்கியாக மட்டுமே ரூ.32 கோடிக்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது. பங்குதாரர்களுக்கு ரூ. 85 கோடிக்கு மேல் கடன் தரவேண்டியுள்ளது.
கோடக் மகிந்திரா நிறுவனம் சுபிக்ஷா தனக்குத் தரவேண்டிய கடன் பாக்கிக்காக அந்நிறுவனத்தின் சொத்துக்களை ஜப்தி செய்ய முனைந்தது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சுபிக்ஷா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், கோடக் மகிந்திரா நிறுவனத்தின் ஜப்தி நடவடிக்கை தொடரலாம் என அறிவித்துள்ளது.
மேலும் சுபிக்க்ஷாவுக்கு எதிரான நோட்டிசை தேசிய நாளிதழ்களில் வெளியிடவும் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கோடாக் மகேந்திராவின் வங்கியின் நடவடிக்கையை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ அந்த நிறுவன பங்குதாரர்களுக்கு இந்நோட்டீஸ் மூலம் ஒருவாய்ப்பு தரப்படுகிறது. தனது பங்குதாரர்களுடனும் கடன் தாரர்களுடனும் சமரசம் செய்துகொள்ள சுபிக்க்ஷா குழுமம் கேட்டிருந்த அவகாசத்தை அளிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.