30 வி.ஐ.பிக்களுக்கு வழங்கப்படும் எக்ஸ் பாதுகாப்பு ரத்தாகிறது
டெல்லி: 30 விஐபிக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் எக்ஸ் பிரிவு பாதுகாப்பை ரத்து செய்ய மத்திய அரசுமுடிவு செய்துள்ளது.
பாதுகாப்புப் படையினர் பற்றாக்குறை காரணமாக இந்த முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
இதுதொடர்பாக நீண்ட ஆய்வு மற்றும் விவாதத்திற்குப் பின்னர் இம்முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாம்.
ஏற்கனவே முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சபர்வால், நடிகர் கோவிந்தா, உ.பி. அரசியல் தலைவர் டி.பி.சாதவ், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அன்வர் உசேன், டெல்லியைச் சேர்ந்த 2 பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட 23 பேரை, விஐபிக்கள் பட்டியலிலிருந்து நீக்கிய மத்திய அரசு அவர்களுக்கான பாதுகாப்பையும் ரத்து செய்தது என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் எக்ஸ் பாதுகாப்பு வளையத்தின் கீழ் வரும் 30 பேருக்கு அந்தப் பாதுகாப்பை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள நிலையிலும் கூட தனக்கு தேவையில்லாமல் அதிகபட்ச பாதுகாப்பு வேண்டியதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதையே முன்னுதாரணமாகக் கொண்டு மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது.
தற்போது 30 பேர் நீக்கப்பட உள்ளதைத் தொடர்ந்து எக்ஸ் பிரிவு பாதுகாப்புப் பட்டியலில் உள்ளோரின் எண்ணிக்கை 20 ஆக குறைகிறது.