பிரச்சினைகளுக்கு பாஜகவே தீர்வு காண வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். தலைவர்
பாஜகவுக்குள் ஜின்னாவால் பெரும் புயல் வீசிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முதல் முறையாக அவர் கருத்து தெரிவித்தார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மோகன் பகவத் கூறுகையில், தனது எதிர்காலத்தை பாஜகதான் சிந்திக்க வேண்டும். முடிவு செய்ய வேண்டும். கட்சிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை கட்சிதான் முடிவெடுக்க வேண்டும்.
எங்களது ஆலோசனைகளை அவர்கள் கேட்டால், எப்போதும் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அதேசமயம், அரசியல் முடிவுகளை ஸ்திரமான முறையில் எடுக்கக் கூடிய வகையில் தலை சிறந்த தலைவர்கள் பாஜகவில் உள்ளனர்.
பாஜகவின் தினசரி நடவடிக்கைகளில் ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ். தலையிட்டதில்லை. எனவே பாஜக குறித்து நாங்கள் கவலைப்படத் தேவையில்லை. பாஜகவில் நிலவும் பூசல் குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோமா, இல்லையா என்ற கேள்வியும் அர்த்தமற்றது.
ஷோரி கூறுவதை ஏற்க முடியாது...
பாஜகவை ஆர்.எஸ்.எஸ். எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அருண் ஷோரி கூறுவதை ஏற்க முடியாது. சங்கத்திற்கு (ஆர்.எஸ்.எஸ்.) என்று பல பணிகள் உள்ளன. அவற்றை மட்டுமே அது கவனிக்கும். பாஜக உதவி கோரினால், அறிவுரை கோரினால் அதற்கு நிச்சயம் நாங்கள் செவி சாய்ப்போம். அவர்கள் கேட்காமல் நாங்கள் எந்த அறிவுரையையும் வழங்க முடியாது.
அருண் ஷோரி மதிப்புக்குரிய தலைவர், மூத்த பத்திரிக்கையாளர். அவர் பிறர் குறித்து கூறியுள்ள கருத்துக்கள் குறித்து கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை.
இளம் தலைவர் - பாஜகதான் முடிவெடுக்க வேண்டும்..
சங் தலைவர்களின் சராசரி வயதாக நாங்கள் 50 முதல் 60 வரை என வைத்துள்ளோம். அதேபோல பாஜகவின் தலைவர் பதவிக்கும் வயதை நிர்ணயம் செய்வது என்பதை பாஜகதான் முடிவெடுக்க வேண்டும்.
யார் மூத்தவர் என்று பேச ஆரம்பித்தால் உண்மையில் ஆர்.எஸ்.எஸ்.ஸை விட பாஜகதான் மூத்தது. தலைவர்களின் சரசாரி வயதைப் பாருங்கள். நாங்கள் ஆலோசனை தரத் தயங்கியதில்லை. ஆனால் அதை ஏற்பதும் நிராகரிப்பதும் பாஜகவின் பிரச்சினை.
ஜின்னாதான் பிரிவினைக்குக் காரணம்...
இந்தியப் பிரிவினைக்கு ஜின்னாதான் நேரடிக் காரணமாக இருந்தார். இந்துக்களும், முஸ்லீம்களும் இணைந்து வாழ முடியாது என்ற கோட்பாட்டை அவர்தான் வலியுறுத்திக் கூறி வந்தார். இவை எல்லாம் வரலாற்று உண்மைகள். இவற்றை ஆர்.எஸ்.எஸ். நம்புகிறது என்றார் மோகன் பகவத்.
முன்னதாக வியாழக்கிழமை இரவு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், மோகன் பகவத்தை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.