சந்திரயான்-இஸ்ரோ தகவல் தொடர்பு துண்டிப்பு!
2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது சந்திரயான். நிலவை ஆராய இந்தியா அனுப்பிய விண்கலம்தான் சந்திரயான். இந்தியாவின் முதல் ஆளில்லாத நிலவுப் பயணமும் இது என்பதால் ஒட்டுமொத்த இந்தியர்களும் சந்திரயானின் பயணத்தால் பெருமிதம் கொண்டிருந்தனர்.
நிலவை வலம் வந்து கொண்டிருந்த சந்திரயான் உடனான தகவல் தொடர்பு இன்று அதிகாலை 1.30 மணி முதல் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதை இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது. சந்திரயான் விண்கலம் என்ன ஆனது என்பது குறித்து ஆய்வுகள் தொடங்கியுள்ளன.
இருப்பினும் சந்திரயான் ஏற்கனவே தனது பணிகளை நிறைவேற்றி விட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நிலவை அடைவது மற்றும் நிலவு குறித்த புகைப்படங்களை அனுப்புவது ஆகிய முக்கியப் பணிகளை சந்திரயான் ஏற்கனவே முடித்து விட்டதாக இஸ்ரோ கூறுகிறது.
நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்ற ஆய்வையும் சந்திரயான் மேற்கொண்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், சந்திரயான் விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் சூடு ஆகிய பிரச்சினைகளைச் சந்தித்தது. இந் நிலையில் தற்போது சந்திரயானுக்கும், இந்தியாவுக்குமான தகவல் நின்று போய் விட்டது.
விண்வெளியில் 312 நாட்களை முடித்துள்ளது சந்திரயான். நிலவைச் சுற்றிலும் மொத்தம் 3,400 முறை வலம் வந்துள்ளது.
முடிந்து விட்டது-மயில்சாமி அண்ணாதுரை:
இதற்கிடையே, சந்திரயான்-1 திட்டம் இத்துடன் முடிவுக்கு வந்து விட்டதாக திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.