சென்னையில் இன்றும், நாளையும் விநாயகர் ஊர்வலம் - பலத்த பாதுகாப்பு
சென்னை: சென்னை மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்றும், நாளையும் விநாயகர் சிலைகளைக் கரைக்கும் பணி நடைபெறுகிறது. இதையொட்டி ஊர்வலங்கள் நடைபெறவுள்ளதால் 12 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
சென்னை நகரில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கிட்டத்தட்ட 3000க்கும் அதிகமாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டு வந்தது. இவற்றில் 735 சிலைகள் பெரியவை.
இவை அனைத்தும் இன்றும் நாளையும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படவுள்ளன.
மொத்தம் 6 அமைப்புகளுக்கு ஊர்வலம் நடத்த அனுமதி தரபப்ட்டுள்ளது.
ஊர்வலங்கள் எந்தெதந்த பாதையில் செல்ல வேண்டும், எங்கு சிலைகளைக் கரைக்க வேண்டும் என்பதை ஏற்கனவே அரசும், காவல்துறையும் அறிவித்துள்ளன.
சென்னை நகர சிலைகளை, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை. நகர், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை அருகே, கார்போரண்டம் அருகே, எண்ணூர், காசிமேடு ஆகிய 6 இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த இடங்களில் ராட்சத கிரேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கொண்டு வரப்படும் சிலைகளை இங்கு கொண்டு வந்து வைக்க வேண்டும். பின்னர் கிரேன் மூலம் அந்த சிலைகள் படகுகளில் வைக்கப்படும். தன்னார்வ தொண்டர்கள் படகுகளில் சிலைகளை எடுத்து சென்று கடலில் 500 மீட்டர் தூரத்துக்கு அப்பால் கரைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேரடியாக யாரும் போய் கடலில் சிலைகளைக் கரைக்க முடியாது.
இன்று காலை மின்ட் பகுதியிலிருந்து சிவசேனாவின் குமாரராஜா பிரிவினரின் சிலைகள் ஊர்வலம் நடைபெறுகிறது. மாலையில் வேளச்சேரியில் ராஜேஷ் பிரிவினரின் ஊர்வலம் நடக்கிறது.
இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் நாளை ஊர்வலம் நடத்துகின்றன.
சிலைகள் ஊர்வலம் நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து சென்னை நகரில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு ரோந்துப் பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகரில் மட்டும் 12,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
சிலைகள் ஊர்வலத்தின்போது கலவரத் தடுப்புப் போலீஸாரும், தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனமும் உடன் செல்லும்.