கல்லூரி-பல்கலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு
சென்னை: பல்கலைக்கழக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு இன்று ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிய ஊதிய உயர்வு 2006ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிடப்படும். முழு ஊதிய பலன்கள் 2007 ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிடப்படும்.
புதிய உயர்வின்படி பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி பேராசிரியர்களின் மாத ஊதியம் தற்போது உள்ள ரூ. 40,344 என்பதற்குப் பதில், ரூ. 62,085 ஆக இருக்கும்.
புதிதாக நியமிக்கப்பட்ட விரிவுரையாளர்களின் மாத ஊதியம் தற்போது உள்ள ரூ. 19,680 என்பதற்குப் பதிலாக ரூ. 26,352 ஆக இருக்கும்.
ஊதியம் தவிர பிற சலுகைகள், படிகள் ஆகியவை மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையானதாக வழங்கப்படும்.
இந்த உயர்வின் மூலம் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பலனடைவர். அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. 557.49 கோடி செலவு ஏற்படும்.
ஊதிய நிலுவை 3 தவணைகளாக வழங்கப்படும் என்றார் முதல்வர்.