ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் அலுவலக பொருட்கள் ஜப்தி
ஸ்ரீவில்லிபுத்தூர்: நில ஆர்ஜித வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் அலுவலக பொருட்கள் நீதி மன்றத்தால் ஜப்தி செய்யப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் அருகே உள்ளது வலையப்பட்டி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள் (75). இவரது மகன் பால்சாமி (50). இவர்களுக்கு பாட்டக்குளத்தில் 4.58.5 எக்டேர் நிலம் உள்ளது.
இந்த இடத்தில் சமத்துவபுரம் கட்டுவதற்காக இவருடைய நிலம், ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 1998 செப்டம்பர் 25 ம் தேதி கையகப்படுத்தப்பட்டது.
இதற்கு ஏக்கருக்கு 21 ஆயிரத்து 800 ரூபாய் வீதம் 4 லட்சத்து 37ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதை வாங்க மறுத்த இவர்கள், கூடுதல் தொகை கேட்டு 1999ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சப் - கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி தாரணி, 2003 நவம்பர் 24 ம் தேதி அன்று தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் ரூ 34 லட்சத்து 21 ஆயிரத்து 914 வழங்க உத்தரவிட்டார். ஆனால் இத் தொகை வழங்கப்படாததால் கடந்த 2004 ல் பேச்சியம்மாளும், பால்சாமியும் சப் - கோர்ட்டில் நிறைவேறுதல் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி சந்திரா, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள இரண்டு லட்சம் ரூபாய் பெறுமான பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இதனையடுத்து, நீதி மன்ற கோர்ட் ஊழியர்கள் உதவியுடன் நில உரிமையாளர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் இருந்த மேஜைகள், நாற்காலிகளை தங்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
இதனால் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.