சந்திரயான்-1 திட்டம் மாபெரும் வெற்றிதான் - கலாம்
பெங்களூர்: சந்திரயான்- 1 திட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. முதல் முறையே நமக்குப் போதிய அளவுக்கு ரிசல்ட் கிடைத்திருப்பதால் இது நிச்சயம் பெரிய வெற்றிதான் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
பெங்களூர் வந்த அப்துல் கலாமிடம் செய்தியாளர்கள் சந்திரயான்-1 திட்டம் வெகு குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்தது குறித்து கேட்டனர்.
அதற்குக் கலாம் பதிலளிக்கையில், முதல் முறையிலேயே நமக்கு தேவையான முடிவுகள் கிடைத்துள்ளன. எனவே இது நிச்சயம் வெற்றிதான். சந்திரயான்-1 திட்டம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.
சந்திரயான்-1 வெற்றிகரமாக பூமியைச் சுற்றி வந்தது. பின்னர் நிலவைச் சுற்றி வந்தது. கடந்த பத்து மாதங்களாக அதில் இருந்த பத்து சாதனங்களும் தகவல்களை தொடர்ந்து அனுப்பி வந்தன. இவையெல்லாம் முக்கியமானவை.
மூன் இம்பாக்ட் பிராப் கருவியை சந்திரயான்-1 விண்கலத்திலிருந்து இஸ்ரோ வெற்றிகரமாக பிரித்தெடுத்தது இங்கு மிக முக்கியமானது. பின்னர் மூன் இம்பாக்ட் பிராப், நிலவில் இறங்கியது அதை விட மிகப் பெரிய வெற்றியாகும்.
இவையெல்லாம் சந்திரயான்-1 திட்டம் வெற்றிகரமானது, முழுமையானது என்பதை நமக்கு உணர்த்துகின்றன என்றார் கலாம்.
கஷ்டமான நிலை - மாதவன் நாயர்
இதற்கிடையே, சந்திரயான்- 1 திட்டம் எதிர்பாராத நிலையில் முடிவுக்கு வந்திருப்பதை இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், இது மிகவும் கடினமான நிலைமை. இப்போதைக்கு நாங்கள் இந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்து விட்டோம்.
என்ன தவறு நடந்தது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். அதை எதிர்காலத்தில் சரி செய்ய முயற்சிப்போம்.
சந்திரயான்-1 திட்டம் மறுபடியும் தொடருமா என்பதை என்னால் இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது என்றார் நாயர்.