தமிழர் முகாம்களுக்காக கூடாரத் துணிகள் அளித்த இந்தியா
கொழும்பு: இடம் பெயர்ந்த தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ல முகாம்களில் மழையிலிருந்து தப்பிக்க கூடாரம் அமைக்க இந்தியா உதவிகள் செய்துள்ளதாம்.
மழைக் காலத்திற்கு முன்பாக தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காகவும், அதற்குத் தேவையான கூடாரங்களை அமைக்கவும் இந்த கூடாரத் துணிகளை இந்தியா அனுப்பியுள்ளதாக இலங்கை தேசிய மறு சீரமைப்பு அமைச்சக செயலாளர் குமரசிறி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இடம் பெயர்ந்தோருக்கான முகாம்களில் உள்ள தமிழர்களுக்காக கூடாரத் துணிகளை இந்தியா வழங்கியுள்ளது.
இலங்கை அரசு அமல்படுத்தி வரும் உதுரு வசந்தயா (வடக்குக்கு வசந்தம்) என்ற திட்டத்தின் கீழ் இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 12 கூடாரத் துணிகளும், விவசாயப் பொருட்களும், மீன் பிடி சாதனமும் அளிக்கப்படும். இதுதவிர மறு சீரமைப்புத் திட்டத்தின் கீழ் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ரூ. 11,000 பணமும் தரப்படும்.
132 மில்லியன் ரூபாய் நிதியுதவியை இந்தியா அளித்துள்ளது. இதற்காக இந்தியாவுக்கு நன்றி கூறிக் கொள்கிறோம். மழைக் காலத்திற்கு முன்பாக 7500 குடும்பங்களை மறு குடியமர்த்தி விடுவோம் என்றார் குமரசிறி.