டாடா ஸ்டீல் முதல் காலாண்டு நஷ்டம் ரூ. 2209 கோடி
பொருளாதார மந்தம், ஸ்டீல் பொருட்களுக்கான தேவை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தரப்பில் மிகவும் குறைந்துவிட்டது போன்றவைதான் இந்த நஷ்டத்துக்குக் காரணம் என்று டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது.
இந்தக் காலாண்டில் மட்டுமே டாடா ஸ்டீலின் விற்பனை 40 சதவிகிதம் குறைந்துவிட்டதாம். கடந்த ஆண்டு இதே காலாண்டில் இந்த நிறுவனம் சம்பாதித்த லாபம் ரூ.3901 கோடி.
டாடா ஸ்டீல் நிர்வாக இயக்குநர் பி முத்துராமன் இதுகுறித்துக் கூறுகையில், "சர்வதேச அளவில் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஸ்டீல் தேவை அடியோடு குறைந்துவிட்டது. அங்கெல்லாம் ரியல் எஸ்டேட் துறை அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் 50 சதவிகிதம்தான் இப்போது விற்பனையை மேற்கொண்டுள்ளோம். பல யூனிட்டுகளை அங்கு மூடி விட்டோம்.
கார் மற்றும் வாகன உற்பத்தி பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதும்கூட, டாடா ஸ்டீலின் இந்த வீழ்ச்சிக்குக் காரணம்தான்," என்றார்.
டாடா ஸ்டீலின் ஐரோப்பிய பிரிவின் சிஇஓ கிர்பி ஆடம்ஸ் கூறுகையில், "இந்த வீழ்ச்சியை எதிர்பார்த்தோம், அடுத்த காலாண்டிலும் இந்த பாதிப்பு இருக்கும்" என்றும் தெரிவித்தார். ஆனால் சர்வதேச பொருளாதார நிலைமைகள் மாறத் துவங்கினால், ஸ்டீல் விற்பனையிலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கும் என்றார்.
மேலும் கோரஸ் டாடா நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து டாடா ஸ்டீல் செயல்படாததும்கூட இந்த பெரும் நஷ்டத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.