வினோபா பவேவைப் போல உண்ணாவிரதம் இருந்து மரணத்தைத் தழுவ தீர்மானித்த தியாகி
சுதந்திரப் போராட்ட வீரரான டாக்டர் ஜோஷி, சிறந்த கண் மருத்துவரும் ஆவார். மகாத்மா காந்தி, வினோபாபவே ஆகியோரின் ஆலோசனையின் பேரில் இவர் தனக்கு அப்போது கிடைத்த மிகப் பெரிய மருத்துவமனை வேலையை விட்டு விட்டு ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் சேவையைத் தொடங்கினார்.
சுதந்திரப் போராட்டத்தில் தீவீரமாக பங்கேற்றார். தற்போது 94 வயதாகும் ஜோஷி, தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள தீர்மானித்தார். இதற்காக, 1982ம் ஆண்டு தனது குருவான வினோபாபவே உண்ணாவிரதம் இருந்து மரணத்தைத் தழுவிய முறையை தானும் கடைப்பிடிக்க தீர்மானித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
கடந்த 2 வாரங்களாக ஜோஷி சாப்பாடு எதையும் உட் கொள்ளவில்லை. வெறும் தண்ணீர் மட்டும் அருந்தி வருகிறார்.
குஜராத்தின் விஸ்நகரில் உள்ள ஜோஷியின் வீட்டில் அவர் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரது உறவினர்கள், நண்பர்கள் என பலரும் வந்து ஜோஷியைப் பார்த்து வணங்கி வருகின்றனர்.
ஜோஷியின் முடிவு குறித்து அவரது மகன் டாக்டர் மிஹிர் ஜோஷி கூறுகையில், சமீபத்தில் அவர் சமையலறையில் வழுக்கி விழுந்து விட்டார். இதில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து இதுவரை வாழ்ந்தது போதும் என்று நினைக்கிறேன். மரணத்தைத் தழுவ விரும்புகிறேன் என்றார்.
இதையடுத்து உடனடியாக சாப்பிடுவதை நிறுத்தி விட்டார். வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து வருகிறார். வேறு எதுவும் சாப்பிடுவதில்லை. வினோபாபவே வழியில் தானும் மரணத்தைத் தழுவ தீர்மானித்திருப்பதாக அவர் கூறுகிறார்.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஜோஷி, கிட்டத்தட்ட 4 லட்சம் பேருக்கு இலவசமாக கண் அறுவைச் சிகிச்சையை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோஷியின் முடிவால் குஜராத் மக்கள் சோகமடைந்துள்ளனர்.