வறட்சி, விலைவாசி உயர்வு குறித்து பிரதமர் கவலைப்படட்டும் - பாஜக
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் பாஜகவில் நடப்பவை குறித்து கவலைப்படத் தேவையில்லா. மாறாக, விலைவாசி உயர்வு, வறட்சி நிலைமை குறித்து மட்டும் அவர் அக்கறை காட்டினால் போதும் என்று பாஜக கூறியுள்ளது.
பாஜகவில் நடப்பவை நாட்டுக்கு நல்லதல்ல என்று ராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்திருந்தார்.
இதை பாஜக கண்டித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், பாஜகவில் நடப்பவை குறித்து கவலைப்படுவதை விட விலைவாசி உயர்வு, வறட்சி நிலைமை குறித்து பிரதமர் அதிக அக்கறையும், கவலையும் தெரிவிக்க வேண்டும்.
ஆனால் பாஜக குறித்து கவலைப்படுகிறார் பிரதமர். மக்களுக்கு நிவாரணம் தரும் வகையில் விலைவாசி உயர்வைக் குறைப்பது குறித்தும், வறட்சி நிலையைப் போக்குவரத்து குறித்தும் அவர் அதிக அக்கறையும், கவலையும் காட்ட வேண்டும் என பாஜக விரும்புகிறது.
எங்களது கட்சி பற்றி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் (பிரதமர்) மக்களைப் பற்றி மட்டும் அக்கறை செலுத்துங்கள். அப்படி நீங்கள் செயல்படாவிட்டால், போராட்டங்கள் மூலம் மக்களைப் பற்றி நீங்கள் நினைக்குமாறு நாங்கள் செய்ய வேண்டி வரும்.
ராஜ்நாத் சிங் மீண்டும் போட்டியிட மாட்டார்...
கட்சித் தலைவர் பதவிக்கு மீண்டும் ராஜ்நாத் சிங் போட்டியிட முடியாது. காரணம், கட்சி விதிமுறைப்படி ஒருவர் தொடர்ந்து 2 முறை தலைவர் பதவிக்குப் போட்டியிட முடியாது என்றார் ஜாவேத்கர்.
பாஜகவில் ஏற்பட்டுள்ள பெரும் புயலைத் தணிக்க ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் தலையிட்டார். அவருடைய யோசனைப்படி அத்வானி, ராஜ்நாத் சிங் ஆகியோர் விரைவில் பதவி விலகவுள்ளனர்.
அதன் பின்னர் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கவுள்ளது பாஜக. கட்சித் தலைவர் பதவிக்கு அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, அனந்தகுமார் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.












Click it and Unblock the Notifications