இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 12 இலங்கை மீனவர்கள் கைது
தூத்துக்குடி: இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 12 இலங்கை மீனவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
இந்திய கடலோர காவல்படை கப்பல் வீரா நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது தூத்துக்குடியில் இருந்து கிழக்கே சுமார் 10 கடல் மைல் தொலைவில் ஒரு படகு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றி கொண்டிருந்தது.
அந்த படகு தமிழகத்தை சேர்ந்தது போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக காணப்பட்டது. இதையடுத்து கடலோரக் காவல் படையினர் அருகில் சென்று விசாரித்தனர். இதில் அது இலங்கையை சேர்ந்த படகு என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்து அழைத்து வந்தனர். வரும் வழியில் மேலும் ஒரு படகில் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
கடலோரக் காவல்படையினர் அவர்களையும் கைது செய்தனர். இரண்டு படகுகளிலும் இருந்த 9 மீனவர்களை இன்று தெர்மல் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கின்றனர்.
ஏற்கனவே இதேபோல் அத்துமீறி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்ததாக 12 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு தெர்மல் காவல் நிலையத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.