போலீசாரை சிறைபிடித்து மணல் கொள்ளை- கேரள கும்பல் அட்டகாசம்
கன்னியாகுமரி வழியாக கேரளாவுக்கு மணல், எரிசாராயம், ரேசன் பொருட்கள் கடத்தப்படுகின்றன. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து அதிக அளவில் லாரிகள் மூலம் மணல் கடத்தல் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்தன.
இதை தடுக்க எல்லை பகுதியில் 18 இடங்களில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடையாலுமூடு பஞ்சாயத்திற்குட்பட்ட கேரள-குமரி எல்லையில் உள்ள நோட்டா சோதனை சாவடியில் நேற்று இரவு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் 4 ஏட்டுகள் பணியில் இருந்துள்ளனர்.
அதிகாலை 3 மணி அளவில் 25க்கும் அதிகமான அடங்கிய ரவுடி கும்பல் சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசாரை நோக்கி கல் வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அவர்களை சிறைபிடித்தது.
அப்போது நம்பர் பிளேட் இல்லாத நிலையில் 25க்கும் மேற்பட்ட லாரிகள் சோதனை சாவடி தடுப்புகளை உடைத்து தள்ளியபடி அம்பூரி பஞ்சாயத்து வழியாக கேரளாவுக்குள் நுழைந்தன.
சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தின்போது அக்கும்பலை எதிர்கொள்ள போலீசாரிடம் துப்பாக்கி உள்ளிட்ட எந்த ஆயுதமும் இல்லை. இதனால் போலீசாரை அந்த கும்பல் எளிதில் சுற்றி வளைக்க முடிந்தது. மணல் லாரிகள் அனைத்தும் சென்ற பின்னர் அந்த கும்பல் அவர்களை விடுவித்து விட்டு சென்றது.
இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.