சென்னையில் மூப்பனார் நினைவு தின போஸ்டர்-வாசன் மீது புகார்
சென்னை மாநகராட்சி சமீபத்தில் பிறப்பித்த ஆணைப்படி அண்ணாசாலை மற்றும் காமராஜர் சாலையில் எந்த விளம்பர பேனர்களோ, போஸ்டர்களோ வைக்க கூடாது.
இந்நிலையில் மறைந்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஜிகே மூப்பனாரின் நினைவு தின விழா நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதை முன்னிட்டு சென்னை நகர் முழுவதும் போஸ்டர்கள், பேனர்களை காங்கிரஸார் வைத்திருந்தனர்.
மேலும், தடை செய்யப்பட்ட அண்ணா சாலை, காமராஜர் சாலை பகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பாக மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சரும், மூப்பனாரின் மகனுமான ஜிகே வாசன் மீது சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் வாசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விளம்பரங்கள், பேனர்கள் வைத்துள்ளனர். அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.