இரட்டை கொலை வழக்கு: கிராமத்தினர் ஓடவில்லை-ஏடிஜிபி அர்ச்சனா
சென்னை: சென்னை இரட்டை கொலை வழக்கில் பனையூர் கிராமத்தை சேர்ந்த 50 பேருக்கு சம்மன் அனுப்பட்டதாகவும், அதனால் கிராம மக்கள் ஓட்டம் எடுத்ததாகவும் ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அது தவறான செய்தி என சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை,
நீலாங்கரை அடுத்த பனையூரில் நடந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சிறப்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் ஒரு பத்திரிகை ஒன்று பனையூர் கிராமத்தை சேர்ந்த 50 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியதாகவும், இதனால் கிராம மக்கள் ஓட்டம் பிடித்ததாகவும் செய்திகள் வெளியிட்டுள்ளது. இது முற்றிலும் தவறான செய்தி.
இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட இளங்கோவனின் மருமகள் வசந்தி, அவரது குழந்தைகளிடம் நடந்த விசாரணையில் சண்முகராஜன் மட்டுமே இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
சண்முகராஜன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது. கொலை அன்று அவர் பயன்படுத்திய ஹுண்டாய் கார் திருடப்பட்டு பயன்படுத்தப்பட்ட கார். ஏற்கனவே நீலாங்கரை காவல் நிலைய எல்லையில் ராஜாமுகமது என்பவர் கடந்த 24.6.08 அன்று இந்த கார் காணாமல் போனதாக புகார் கொடுத்துள்ளார்.
சில பத்திரிகைகள் வெளியிடும் பரபரப்பூட்டும் செய்திகள் வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அந்த அறிக்கையில் அர்ச்சனா ராமசுந்தரம் தெரிவித்துள்ளார்.