பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த 2 பேர் திடீர் சாவு
சென்னை: சென்னையில் பஸ்சுக்காக காத்திருந்த 2 பேர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது..
சென்னை புளியந்தோப்பு பஸ் நிறுத்தத்தில் இன்று காலை பலர் காத்திருந்தனர். அப்போது முதியவர் ஒருவர் அங்கு வந்தார். பஸ்சுக்காக காத்திருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்து போனார்.
அவரது கையில், ஆர்.ஏ. என்ற எழுத்துக்கள் பச்சை குத்தப்பட்டுள்ளன. வேட்டி, சட்டை அணிந்திருந்தார். கொரட்டூரைச் சேர்ந்த ஒரு டெய்லர் கடை முகவரி சட்டையில் காணப்படுகிறது.
இதுபோல புளியந்தோப்பு கன்னிகாபுரம் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த ஒருவர், பஸ்சுக்காக உட்கார்ந்திருந்தபோது அப்படியே மரணமடைந்தார்.
இறந்த இருவருக்கும் 55 வயதுக்கு மேல் இருக்கும். இருவரும் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இருவரும் ஒரே பகுதியில் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருவரது உடல்களையும் கைப்பற்றிய போலீஸார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.