ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 5 குடும்பங்கள்!
தர்மபுரி: தர்மபுரி அருகேகே பஞ்சாயத்துக் குடிநீர் இணைப்பு பெறுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஐந்து குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நூலஹள்ளி கிராமத்தை சேர்ந்த கோபால், அவரது மகன் கிருஷ்ணன், கோபால் தம்பி குப்புசாமி, குப்புசாமியின் மகன்கள் செந்தில், சிவக்குமார். அனைவரும் தத்தமது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோபால், அவரது தம்பி மகன் சிவக்குமார் ஆகியோர், தர்மபுரி மாவட்ட கலெக்டரிடம் ஒரு புகார் கொடுத்தனர்.
அதில்,
எங்கள் வீட்டிற்கு பஞ்சாயத்து குடிநீர் இணைப்பு பெறுவதில் தகராறு ஏற்பட்டது. இதில், ஊர் கவுண்டர் மற்றும் சிலர், கட்டப் பஞ்சாயத்து நடத்தி எங்கள் ஐந்து குடும்பங்களையும், ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
எங்கள் ஊரை சேர்ந்த யாரும் எங்களது நிலத்தில் வேலை பார்க்க வரக்கூடாது, சுக, துக்க நிகழ்ச்சிகள், கோவில் விழாக்களில் கலந்து கொள்ளக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை ஊர் மக்களுக்கு விதித்துள்ளனர்.
இதனால், நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். இது குறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.
இந்த மனு குறித்து உடனே விசாரணை நடத்த காவல்துறைக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இன்னும் நாட்டாமை பட பாணியில் இருந்து வரும் இவர்களை என்னவென்று சொல்வது...?