For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்புவதை எதிர்த்து வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: இலங்கையில் உள்ள சிங்கள அரசு தமிழர்களை துன்புறுத்தி வரும் நிலையில், இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்க தடை விதிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வக்கீல்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மதுரை லேக் ஏரியாவில் வசித்து வரும் ஏ.ஜோயல் பவுல் அந்தோணி என்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இதுதொடர்பாக பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், இலங்கையில் வருகிற 8-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும் கலந்து கொள்கிறது. இலங்கை அரசு கடந்த சில மாதங்களாக தடை செய்யப்பட்ட ஆயுதங்கள், குண்டுகளை பயன்படுத்தி லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தது.

தமிழர்கள் கொல்லப்படுவதை எதிர்த்து தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினர். தமிழர்கள் படும் துன்பத்தை தாங்கிக் கொள்ள முடியாத 20 பேர் உயிர் நீத்தனர். மத்திய அரசும் உயர்மட்ட குழுவை அனுப்பி மனித உரிமை மீறல்களை தடுக்கக்கோரியது.

தமிழக முதல்வர் கருணாநிதியும் உண்ணாவிரதம் மேற்கொண்டார். கடந்த 60 ஆண்டுகளில் 12 லட்சம் தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டுள்ளனர்.

தற்போது தமிழர்கள் அந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் நடக்கும் அவலங்களைப் பார்க்க சர்வதேச மனித உரிமை நிறுவனங்களையும், சர்வதேச பத்திரிகையாளர்களையும் இலங்கை அரசு அனுமதிப்பது இல்லை. சர்வதேச சட்டங்களையும் இலங்கை அரசு மதிப்பதில்லை.

இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை பல்வேறு நாடுகள் கண்டித்துள்ளன. தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி பிரச்சினை இருந்த போது, அங்கு நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கலந்து கொள்ளவில்லை.

தற்போது உள்ள சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்பினால் சர்வதேச சமூகம் இந்தியாவை மதிக்காது. எனவே இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று மத்திய உள்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இந்த மனுவுக்கான வக்காலத்தில் 513 வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு வழக்குக்கு பொதுவாக ஒரு வக்கீல்தான் ஆஜராவார். ஆனால் 513 பேர் வாதாடப் போவதாக வக்காலத்து தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X