எல்டிடிஇ ஆதரவு கூட்டம்-அனுமதி கேட்டு பெரியார் தி.க. வழக்கு
சென்னை: தமிழ் ஈழ விடுதலையும், விடுதலை புலிகளும் என்ற தலைப்பில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு பெரியார் திராவிட கழகத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இது குறித்து சேலம் மாவட்டம் மேட்டூர் நகர பெரியார் திராவிட கழக தலைவர் அண்ணாதுரை தொடர்ந்து வழக்கில்,
மேட்டூரில் வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி பெரியார் திராவிட கழகம் சார்பில் தமிழ் ஈழ விடுதலையும், விடுதலை புலிகளும் என்ற தலைப்பில் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக போலீஸாரிடம் அனுமதி கேட்டோம்.
ஆனால், அவர்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டத்திற்கு அனுமதி கொடுக்க முடியாது என கூறிவிட்டனர். மேலும், கடந்த 18ம் தேதி தமிழக அரசு செயலாளர் வெளியிட்ட அறிக்கையையும் காட்டியுள்ளனர்.
எனவே எங்களுக்கு கூட்டத்தை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்றார்.
மனுவைப் பரிசீலித்த நீதிபதி ஜோதிமணி, மேட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.