வேளாங்கண்ணி பாதயாத்திரை-பஸ் மோதியதில் பக்தர் பலி
திருச்சி: திருச்சி அருகே வேளாங்கண்ணி ஆலயத்துக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் அரசு பேருந்து ஒன்று புகுந்ததில் ஒருவர் பலியானார். இருவர் பலத்த காயமடைந்தனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தாசில்தார நகரை சேர்ந்தவர் ஜேசுராஜ்(56). இவர் தன்னுடன் மேலும் 105 பக்தர்களை அழைத்து கொண்டு கடந்த 27ம் தேதி பாதயாத்திரையை துவக்கினார்.
இவர்கள் நேற்று காலை 7 மணி அளவில் திருச்சி திருவெறும்பூர் மேம்பாலம் அருகில் கல்லணை பிரிவு ரோடு அருகே போய் கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்கு பின் பக்கமாக திருச்சியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் எதிர் பக்கத்தில் லாரி வருவதை பார்த்த பஸ் டிரைவர் வண்டியை லேசாக இடது பக்கம் திருப்பினார். இதில் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாதயாத்திரை கூட்டத்தில் புகுந்தது.
இதில் ஜேசுராஜ், மூக்கையன் (59), ராணி (41) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டனர். ஆனால், டாக்டர்கள் ஜேசுராஜ் வரும் வழியிலே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
மற்ற இருவரும் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடு்த்து போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவர் மணிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.