ரயில்வே சரக்கு வர்த்தகம் - 12 சதவீத உயர்வு
டெல்லி: பொருளாதார மந்த நிலையிலும் கூட ரயில்வே சரக்கு வர்த்தகம் ஆகஸ்ட் மாதம் 12 சதவீத உயர்வைக் கண்டுள்ளது.
ரயில்வே மூலம் ஆகஸ்ட் மாதம் 72.9 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு 65.27 மில்லியன் டன்களாக இருந்தது.
இதுகுறித்து ரயில்வே துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ரயில்வே சரக்கு வர்த்தகம் 11.67 சதவீதம் அதிகரித்துள்ளது. இறுதியான புள்ளிவிவரம் அடுத்த வார இறுதியில் தெரிய வரும் என்றார்.
இதேபோல கடந்த ஜூலை மாதம் ரயில்வே சரக்கு வர்த்தகம் 5.83 சதவீத உயர்வைக் கண்டுள்ளது.
நிலக்கரி, சிமென்ட், இரும்பு, உணவு தானியங்கள், பெட்ரோலியப் பொருட்களுக்கு உள்ளூரில் கிராக்கி அதிகரித்துள்ளதே ரயில்வே சரக்கு வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்குக் காரணம்.
இதில் நிலக்கரி பரிவர்த்தனை 16.5 சதவீத உயர்வையும், சிமென்ட் மற்றும் இரும்பு 15 சதவீத வளர்ச்சியையும், உணவு தானியங்கள் 11 சதவீதம் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் 14 சதவீத வளர்ச்சியையும் கண்டுள்ளன.