ரெட்டி: அமெரிக்க பாதுகாப்புத் துறையின் உதவி நாடல்
ஹைதராபாத்: முதல்வர் ராஜசேகர ரெட்டியின் ஹெலிகாப்டர் மாயமானது குறித்து கண்டுபிடிக்க அமெரிக்க பாதுகாப்புத்துறையின் உதவியை ஆந்திர அரசு, மத்திய அரசின் மூலமாக நாடியுள்ளதாக ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் ரமாகாந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இன்று இரவு 7 மணிக்கு ஆந்திர மாநில நிதியமைச்சர் ரோசையா, தலைமைச் செயலாளர் ரமாகாந்த் ரெட்டி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது ரெட்டி கூறுகையில், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், நல்லமலை வனப்பகுதியில், காலை 9.15 முதல் 9.25 மணிக்குள் முதல்வர் சென்ற ஹெலிகாப்டரை சில கிராமத்தினர் பார்த்துள்ளனர். அதுதான் ஹெலிகாப்டர் கடைசியாக பார்க்கப்பட்டது. அதன் பின்னர் ரேடியோ சிக்னல் துண்டிக்கப்பட்டு விட்டது.
முதல்வரின் ஹெலிகாப்டர் கடைசியாக பார்க்கப்பட்ட இடம் நல்லமலைக் காட்டில், பிரகாசம் மற்றும் ஓங்கோல் மாவட்டத்தை நோக்கியுள்ள வனப் பகுதியாகும். எனவே அந்த பகுதியில் தற்போது தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
தேடுதல் பணியில் ராணுவ, விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தற்போது மோசமான வானிலை நிலவி வருவதாலும், மழை பெய்து வருவதாலும் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடத்துவது தடை பட்டுள்ளது.
இருப்பினும் சிஆர்பிஎப் மற்றும் ஆந்திர மாநில சிறப்புக் காவல் படையினர் தரை மார்க்கமாக தேடுதல் பணியில் ஈடுபடுவதற்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா - இஸ்ரோ உதவி...
சம்பந்தப்பட்ட வனப்பகுதியின் சாட்டிலைட் படங்களை பெறுவதற்காக அமெரிக்க பாதுகாப்புத்துறையின் உதவியை நாடியுள்ளோம். சந்தேகப்படும் வனப்பகுதியின் சாட்டிலைட் படங்கள் கிடைத்தால் அது தேடுதல் நடவடிக்கைக்கு உதவியாக இருக்கும்.
அதபோல இஸ்ரோவின் உதவியையும் நாடியுள்ளோம். இஸ்ரோ தனது சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்துள்ளது. அது மிகவும் குறைந்த உயரத்தில் பறக்கக் கூடியது. இரவிலும், மழையிலும் கூட அது பறக்க முடியும். அதன் மூலமும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இதுவரை ஹெலிகாப்டர் எந்த இடத்தில் உள்ளது என்பது குறித்த தகவல் இல்லை.
அது பழைய ஹெலிகாப்டரா, பறக்கும் தகுதியுடன் உள்ளதா, இல்லையா என்பது குறித்து ஆராய இப்போது நேரம் இல்லை. முதல்வரை பத்திரமாக மீட்க வேண்டும் என்பதில் மட்டுமே நாங்கள் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம் என்றார் ரெட்டி.
இன்னும் நல்ல செய்தி வரவில்லை - ப.சிதம்பரம்
முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இன்னும் நல்ல செய்தி வரவில்லை.
ஹெலிகாப்டர் கடைசியாக காணப்பட்ட பகுதிக்கு சிஆர்பிஎப் வீரர்கள் விரைந்துள்ளனர். அவர்கள் தரை மார்க்கமாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுவர். அதேபோல ஆந்திர பிரதேச சிறப்புப் போலீஸ் படையினரும் விரைகிறார்கள்.
தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். இரவிலும் தேடுதல் வேட்டையை மேற்கொள்ளுமாறு ஆந்திரத அரசைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.
நாளை காலை தேடுதல் வேட்டை தீவிரமாக்கப்படும். தற்போது இரவு நேரமாகி விட்டதாலும், மழை பெய்து வருவதாலும் ஹெலிகாப்டர் மூலமாக தேடுதல் வேட்டை நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது.
நல்லதே நடக்கும் என அனைவரும் பிரார்த்திப்போம் என்றார் சிதம்பரம்.
அமைச்சர்கள் விரைந்தனர்...
இதற்கிடையே அமைச்சர்கள் வீரப்ப மொய்லி, பிருத்விராஜ் சவான் ஆகியோர் ஹைதராபாத் விரைந்துள்ளனர்.