ரெட்டி காணாமல் போன நல்லமலை காடு - தென்னிந்தியாவின் நீண்ட வனப் பகுதி
நல்லமலை என்பதற்கு தெலுங்கில் கருப்பு மலை என்று பொருள். கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் இது ஒரு பகுதியாகும். கர்னூல், பிரகாசம், கடப்பா ஆகிய மாவட்டங்களில் இந்த நீண்ட வனம் பரந்து விரிந்துள்ளது.
வடக்கு - தெற்காக இந்த காடு செல்கிறது. கிட்டத்தட்ட 150 கிலோமீட்டர் நீளத்திற்கு இது பரந்து விரிந்துள்ளது. கிருஷ்ணா மற்றும் பென்னார் ஆகிய ஆறுகளுக்கு இடையே இந்த வனம் உள்ளது.
ஆண்டு முழுவதும் இங்கு வெப்பமான சூழ்நிலைதான் காணப்படும். காரணம், இங்கு மலைப் பகுதியும், பாறைகளும் அதிகம் என்பதால். தென் மேற்கு பருவமழைக் காலத்தில் இந்த வனப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்யும். இருப்பினும் இந்த மழை நீர் பூமிக்குள் பெருமளவில் செல்லாமல், அப்படியே ஓடி, குண்டல்கம்மா ஆற்றில் கலந்து விடுகிறது.
இந்த மலைப் பகுதியில் மனித நடமாட்டம் பெருமளவில் கிடையாது. இதனால் இந்த வனப் பகுதியில் மலைக் கிராமங்களும் மிக மிக குறைவாகவே உள்ளன.
இந்த நீண்ட வனத்தின் ஒரு பகுதியில், ஸ்ரீசைலம் புலிகள் சரணாலயம் உள்ளது. புலிகள் மற்றும் சிறுத்தைகள் இந்த வனப்பகுதியில் அதிகம் இருப்பதால் இங்கு சரணலாயம் அமைக்கப்பட்டது.