காகித ஆலை ஊழியர்கள் பணி நிரந்தரம்-கரூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: கரூர் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் 1600 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி வரும் 4ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
கரூர் காகிதபரத்தில் எம்ஜிஆர் காலத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் துவக்கப்பட்டது. கரும்பை மூலப்பொருளாக கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 100 கோடி லாபம் ஈட்டுகிறது. அன்னிய செலாவானியும் அதிகம் கிடைக்கிறது.
இங்கு தற்போது சுமார் 1,700 நிரந்தரத் தொழிலாளர்களும், 1,600 ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். இருவரும் ஒரே வேலையை செய்தாலும் பாதி பேருக்கு அதிக சம்பளமும், பாதி பேருக்கு குறைந்த சம்பளமும் வழங்கப்படுகிறது. இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் மனதில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
அவர்கள் திமுக அரசிடம் கோரிக்கை வைத்தும் எதுவும் நடக்கவில்லை. இந்த ஆண்டு நிறுவனத்தின் வெள்ளி விழா ஆண்டாக இருப்பதால் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்ய திமுக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
இதற்காக மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் வரும் 4ம் தேதி மாலை 4 மணி அளவில் அந்த நிறுவனத்தின் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டம் கழக கொள்கை பரப்புச்செயலாளரும், நாடாளுமன்ற குழுத்தலைவருமான தம்பிதுரை எம்.பி., தலைமையிலும், அண்ணா தொழிற்சங்கப் பேரவைச்செயலாளர் சின்னசாமி எம்எல்ஏ மற்றும் கரூர் மாவட்ட கழகச்செயலாளர் செந்தில்பாலாஜி எம்எல்ஏ ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.