வீட்டு சிறையிலிருந்து மீண்ட பெண் மதம் மாறி காதலரை மணந்தார்
தென்காசி: தென்காசி அருகே பெற்றோரால் சிறை வைக்கப்பட்டு, போலீஸாரால் மீட்கப்பட்ட பெண் என்ஜீனியர், முஸ்லிம் மதத்திற்கு மாறி காதலரை மணந்தார்.
ராஜபாளையத்தை சேர்ந்தவர் சுப்பையா. ஓய்வு பெற்ற அரசு டாக்டர். இவர் மகள் சித்ரா. எம்எஸ்சி ஐடி படித்துள்ளார். இவர் சென்னையில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றினார்.
அப்போது இன்டர்நெட் மூலம் பெங்களூரை சேர்ந்த நசீருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்தனர்.
இதற்கு சித்ரா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. சித்ராவை அவர் பெற்றோர் தென்காசி அருகேயுள்ள இலஞ்சியில் அவர் தாய்மாமா வீட்டில் சிறை வைத்தனர்.
காதலருடன் சேர்த்து வைக்காமல் தன்னை குடும்பத்தினர் துன்புறுத்துவதாக நெல்லை எஸ்பி-க்கு சித்ரா அவரது தோழி மூலம் புகார் செய்தார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி எஸ்பி, தென்காசி டிஎஸ்பி-க்கு உத்தரவிட்டார். டிஎஸ்பி தலைமையில் போலீசார் இலஞ்சிக்கு சென்று தாய்மாமா வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த சித்ராவை மீட்டனர்.
தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சித்ரா, நசீர் பெற்றோரிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். முஸ்லிம் மதத்திற்கு மாறி காதலரை மணப்பேன் என அப்போது சித்ரா உறுதியாக தெரிவித்தார்.
இதையடுத்து இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் நெல்லைக்கு அழைத்து வரப்பட்டனர். நிஷா என்ற பெயரில் முஸ்லிம் மதத்திற்கு மாறிய சித்ராவிற்கும், நசீருக்கும் நெல்லையில் தென்னிந்திய இஷாத்துல் இஸ்லாம் சபையில் சுன்னத்துவல் ஜமாத் முறைப்படி திருமணம் நடந்தது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தென்மண்டல அமைப்பாளர் மில்லத் இஸ்மாயில் தலைமை வகித்தார்.