ரெட்டி விபத்து - இந்தியாவின் மிகப் பெரிய தேடுதல் வேட்டை
நேற்று காலை 8.35 மணிக்கு ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் கிளம்பினார் ராஜசேகர ரெட்டி.
9.35 மணிக்கு ஹெலிகாப்டர் காணவில்லை என்று தகவல் வெளியானது.
10.15 மணிக்கு தனியார் ஹெலிகாப்டர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டன.
1.30 மணிக்கு பாதுகாப்புப் படையின் சேட்டக் ஹெலிகாப்டர்கள் தேடுதலி்ல இணைந்தன. ஆனால் மோசமான வானிலை காரணமாக அவை திரும்பி வந்தன.
2.30 மணிக்கு இந்திய விமானப்படையின் எம்ஐ-8 ஹெலிகாப்டர்கள் களம் இறக்கப்பட்டன. டோர்னியர் மற்றும் ஆவ்ரோ விமானங்கள் வரவழைக்கப்பட்டன.
மாலை 5.30 மணிக்கு நல்லமலைக் காட்டுக்குள் சிஆர்பிஎப் வீரர்கள் நுழைந்தனர். இவர்கள் தவிர ராணுவத்தின் 3 பிரிவுகள், மாநில போலீஸார், நக்சலைட் தடுப்புப் பிரிவு போலீஸார், வருவாய்த்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகளும் தேடுதல் வேட்டையி்ல் இறங்கினர்.
சென்சுஸ் என்று அழைக்கப்படும் பழங்குடியின மக்களின் உதவியையும் மாநில அரசு நாடியது. பொதுமக்களின் உதவியும் நாடப்பட்டது.
மாலை 6.30 மணிக்கு தேடுதல் வேட்டை நிறுத்தப்பட்டது. இருப்பினும் சுகோய் 30 ரக போர் விமானம் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டது.
இஸ்ரோவின் குறைந்த உயரத்தில் பறக்கக் கூடிய ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டு 30க்கும் மேற்பட்ட படங்கள் எடுக்கப்பட்டன.
ஆனால் நேற்று நடந்த இந்த எந்த நடவடிக்கைக்கும் பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் இன்று காலை தொடங்கிய தேடுதல் வேட்டையின்போது விமானப்படையினர் ஹெலிகாப்டர் விழுந்து கிடந்த இடத்தை கண்டுபிடித்தனர்.
கர்னூல் மாவட்டம் ரொல்லபென்டா என்ற இடத்தில் முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் மலைக் குன்றின் மீது நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கர்னூலிலிருந்து 74 கிலோமீட்டர் தொலைவில் அந்த மலைக் குன்று உள்ளது.
ஹெலிகாப்டர் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதை இந்திய விமானப்படை அதிகாரி சாகர் பாரதி உறுதி செய்தார். விமானப்படை ஹெலிகாப்டர்கள்தான், ரெட்டி பயணித்த ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்ட இடம் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலைக் குன்று என்பதால் விமானப்படை ஹெலிகாப்டர்களால் அங்கு இறங்க முடியாத நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஹெலிகாப்டர் இறங்க முடியாத நிலையில் இருப்பதால் விமானப்படை பாராசூட் பிரிவு கமாண்டோக்கள் அனுப்பப்பட்டனர். அவர்கள் சென்று ரெட்டி உள்ளிட்டோர் இறந்ததை உறுதி செய்தனர்.
ஹெலிகாப்டர் கடைசியாக பார்க்கப்பட்ட ஐந்து சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் தேடுதல் வேட்டை நடந்து வந்தது.
--