திமுகவை விமர்சிக்க இளங்கோவனுக்கு உரிமை இல்லை-தங்கபாலு
சேலம்: கூட்டணி குறித்து தனிப்பட்ட விமர்சனங்களை தெரிவிக்க இளங்கோவனுக்கு எந்த உரிமையும் இல்லை. இதை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சேலத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
இளைஞர் காங்கிரஸ்க்கு பல்வேறு மாநிலங்களில் ஜனாயக முறையில், ராகுல் காந்தியின் மேற்பார்வையில் தேர்தல் நடந்துள்ளது. ராகுலின் தலைமையை ஏற்று பல இளைஞர்கள் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் வரும் என்ற இளங்கோவனின் கருத்துக்கு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பதில் கொடுத்துவிட்டார். கூட்டணி குறித்து தனிப்பட்ட விமர்சனம் செய்ய இளங்கோவனுக்கு உரிமை இல்லை. அவரது கருத்து கூட்டணியைக் கட்டுப்படுத்தாது.
காங்கிரஸின் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் கூட்டணி குறித்து வெளியில் தவறாகப் பேசுபவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும். உள்கட்சி விவகாரங்களை வெளியில் பேசி மனக் கசப்பை ஏற்படுத்தக் கூடாது என்று இளங்கோவனுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
நானும், முதல்வர் கருணாநிதியும் நல்ல இணக்கத்துடன் செயல்படுகிறோம். எங்கள் கூட்டணி கொள்கை அடிப்படையில் உருவான கூட்டணி.
விஜய் வந்தால் வரவேற்போம்...
நடிகர் விஜய் காங்கிரஸில் சேர இருப்பதாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. ராகுலின் தலைமையை ஏற்கும் அனைவரையும் காங்கிரஸ் வரவேற்கிறது. விஜயகாந்துடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் பேசப்படும். திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது.
பாஜகவுக்கு எதிர்காலம் இல்லை...
காங்கிரசுக்கு நிகராக வேறு எந்த தேசிய கட்சியிலும் பொறுப்பான தலைமை அமையவில்லை. பாஜகவில் கூச்சலும், குழப்பமும் ஏற்படுவது புதியது அல்ல.
மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் அக்கட்சிக்கு பிரச்னை ஏற்படுகிறது. பாஜகவுக்கு எதிர்காலம் இல்லை என்றார் தங்கபாலு.