ரெட்டி ஹெலிகாப்டரை கண்டுபிடிக்க உதவிய எஸ்எம்எஸ்
டெல்லி: ஆந்திர முதல்வர் ராஜகேசர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் நொறுங்கிய இடத்தை கண்டுபிடிக்க அவரது பாதுகாப்பு அதிகாரிக்கு வந்த எஸ்எம்எஸ் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து ஆந்திர அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில்,
முதல்வர் ராஜசேகர ரெட்டி சென்ற பெல் 430 ஹெலிகாப்டரை கடந்த 2ம் தேதி எவ்வளவோ தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் தேடல் முயற்சிக்கு முதல்வரின் பாதுகாவலர் ஜான் வெஸ்லியின் மொபைலுக்கு வந்த எஸ்எம்எஸ் உதவியது.
அவரது மொபைலுக்கு நேற்று முன்தினம் மதியம் சுமார் 12.06 மணிக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதாவது ஹெலிகாப்டர் ரேடாரில் இருந்து காணாமல் போன இரண்டரை மணி நேரத்துக்கு பி்ன் இந்த எஸ்எம்எஸ் வந்துள்ளது.
இதையடுத்து அந்த மொபைலுக்கு எந்த டவரிலிருந்து எஸ்எம்எஸ் வந்துள்ளது என்பதை கண்டுபிடித்தோம். அங்கிருந்து சுமார் நான்கு கிமீ., சுற்று பகுதிக்குள் தேட முயற்சி செய்தோம்.
இதையடுத்து அப்பகுதியில் இந்திய விமான படையின் ஹகிம்பேட் ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளியை சேர்ந்த இரண்டு சேட்டக் ஹெலிகாப்டர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கின. காலை சுமார் 6.30 மணிக்கு தேட ஆரம்பித்த அவர்கள் 8.30 மணிக்கு ஹெலிகாப்டரை அடையாளம் கண்டனர் என்றார்.
ஆனால், அந்த எஸ்எம்எஸ் யாரிடம் இருந்து வந்தது, அதில் வந்த செய்தி என்ன, அது எந்த மொபைல் நிறுவனத்தைச் சேர்ந்தது போன்ற தகவல்களை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.