அரசியல்வாதிகளுக்கு 60 வயதில் ஓய்வு - வலியுறுத்திய ரெட்டி!
ஹைதராபாத்: அரசியல்வாதிகள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தவர் ராஜசேகர ரெட்டி. ஆனால் விதி, அவரது வாழ்க்கையை சரியாக 60வது வயதில் முடித்து விட்டது.
கடந்த 2003ல் எதிர்கட்சி தலைவராக இருந்த போது ஆந்திரா முழுவதும் சுமார் 1,400 கிமீ., தூரம் நடைபயணம் மேற்கொண்ட ராஜசேகர ரெட்டியின் கடும் முயற்சியின் பலனாக 2004ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஆந்திராவில் பெரும் வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த ரெட்டி அந்தப் பெருமையை தலை மேல் வைத்து ஒருபோதும் கொண்டாடியதில்லை. தோற்றால் நான் பொறுப்பு, வென்றால் சோனியாவும், மன்மோகன் சிங்குமே பொறுப்பு என்று கூறி வந்தவர் அவர்.
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தலைவர்கள் 60வது வயதில் ஓய்வு பெற வேண்டும் என வலியுறுத்தி வந்தார் ரெட்டி. 2004ல் மூத்த தலைவர்கள் அரசியலை விட்டு வெளியேற ரெட்டி தனது 55வது வயதில் முதல்வர் ஆனார். அரசியல்வாதிகளின் ஓய்வு வயது 60 என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதை தன்னுடன் இருந்த அனைவருக்கும் உபதேசித்தார்.
இந்நிலையில் இந்தாண்டு மே 20ம் தேதி இரண்டாவது முறையாக ஆந்திராவின் முதல்வராக பதிவியேற்றார். அப்போதும் அவர் 60 நெருங்கிவிட்ட நிலையில் ஓய்வை அறிவிக்கலாம் என நினைத்திருந்தார்.
ஆனால், அவருக்கு பின் வேறு யாரும் ஆந்திர காங்கிரசில் சொல்லி கொள்ளும் அளவுக்கு பெரிய தலைவராக இல்லாத காரணத்தாலும், தொண்டர்களின் வேண்டுகோள் காரணமாகவும் பதவியை தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் தனது இரண்டாவது பதவி காலம் துவங்கி 100 நாட்கள் முடிந்த நிலையில் கொடூர விபத்தில் பலியானவர் விதி செய்த சதியால் 60வது வயதில் நிரந்தரமாக ஓய்வு பெற்றுள்ளார்.
சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவர் என்ற பெயர் பெற்றவர் ரெட்டி. 60 வயதில் ஓய்வு என்பதை அவர்தான் சொல்லி வந்தார். இப்போது 60 வயதை எட்டிய நிலையில் நிரந்தரமாக ஓய்வுக்குச் சென்றது ஆந்திர மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.