இலங்கையில் சகஜ நிலை நிலவுகிறது: அமைச்சர் செந்தில் தொண்டைமான்
திருச்சி: இலங்கையில்சகஜ நிலை திரும்புகிறது என்று இலங்கை ஊவா மாகாண மின்சாரம், எஸ்டேட் விரிவாக்கம், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் செந்தில் தொண்டைமான் கூறினார்.
திருச்சி வந்த செந்தில் தொண்டைமான் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது பூர்வீகம், சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம். அங்கு நடக்கும் கோவில் திருவிழாவில் பங்கேற்க நான் வந்துள்ளேன்.
தற்போது, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் கூட்டணிக் கட்சியான, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியில் உள்ளேன். சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகியுள்ளேன்.
இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஆறு மாதத்தில் நாடாளுமன்ற தேர்தலும் நடக்க இருக்கிறது.
இலங்கையில், தற்போது, சகஜ நிலை திரும்பி வருகிறது.முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு, நிவாரணப் பொருட்கள் முழுமையாகக் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.