மோசமான வானிலை-எஸ்எம் கிருஷ்ணா விமானம் கராச்சியில் அவசர தரையிறக்கம்
பிரேசிலுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்எம் கிருஷ்ணா, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவு செய்தி கேட்டு தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு அவசரமாக துபாய் வழியாக டெல்லிக்கு புறப்பட்டார்.
துபாயில் இருந்து நேற்று மதியம் 3.40 மணிக்கு அவர் எமிரேட்ஸ் விமானத்தில் கிளம்பினார். இந்நிலையில் அந்த விமானம் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற போது டெல்லி அருகே வான்பகுதியில் வானிலை மோசமாக இருப்பது தெரியவநத்து.
இதையடுத்து அந்த விமானத்தை கராச்சியில் தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டது. அனுமதி கிடைத்ததை அடுத்து விமானம் இரவு 10.35 மணிக்கு கராச்சியில் தரையிறக்கப்பட்டது.
விமானத்திலிருந்து யாரும் கீழே இறங்க அனுமதிக்கப்படவில்லை. சுமார் ஒரு மணி நேரமாகியும் வானிலை சீராகாததை தொடர்ந்து விமானம் மீண்டும் இரவு சுமார் 11.44 மணிக்கு துபாய்க்கு திரும்பிச் சென்றது.
பின்னர் கிருஷ்ணா உள்ளிட்டோர் ஈகே510 விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ஜார்ஜ் பெர்வெஸ் கூறுகையில்,
விமானம் மோசமான வானிலை காரணமாக தான் கராச்சியில் இறங்கியது. விமானத்தில் ஆக்ஸிஜன் கட்டுபாட்டு பகுதியில் கோளாறு ஏற்பட்டதாக பாகிஸ்தான் மீடியாக்கள் வெளியிட்ட செய்தியில் உண்மை இல்லை என்று தெரிவித்தார்.