வங்கக் கடலில் அடர்ந்த காற்றழுத்தம்- புயல் எச்சரிக்கை
ஒரிசா மாநிலம் பாலசோருக்கு தென் கிழக்கே அடர்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலை கொண்டுள்ளது. இது படிப்படியாக நகர்ந்து இன்று பிற்பகல் 1 மணியளவில் வடக்கு மேற்காக, மேற்கு வங்க மாநிலம் திகா என்ற பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
இன்று மாலைக்குள் அது திகாவில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒரிசா மற்றும் மேற்கு வங்க மாநில கடற்கரைப் பகுதிகளில் பலத்த சூறைக் காற்றும், கன மழை மற்றும் மிக பலத்த மழையும் பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை லேசான மழை காணப்படும். சில இடங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நகரில் மேகமூட்டம் காணப்படும். காற்று வீசக் கூடும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தரைக் காற்று பலமாக இருக்கக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக, கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் போக வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை, நாகை, கடலூர் துறைமுகங்களிலும், புதுச்சேரி, எண்ணூர் துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அதேபோல பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.