4 பொறியியல் கல்லூரிகளில் சிபிஐ சோதனை-அங்கீகாரம் ரத்து?
நாகர்கோவில்: தமிழக்கத்தில் அடிப்படை வசதிகள் இன்றி லஞ்சம் கொடுத்து ஏஐசிடிஇ அனுமதி வாங்கியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து 4 பொறியியல் கல்லூரிகளில் சிபிஐ திடீர் சோதனை நடத்தியது.
தமிழகத்தில் சில பொறியியல் கல்லூரிகள் ஏஐசிடிஇ நிபுணர்கள் குழுவுக்கு தெரியாமல் சில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து முறைகேடாக அனுமதி பெற்றதாக சிபிஐக்கு தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
மேலும், கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில்லை என கூறப்படுகிறது. இது போன்ற புகார்கள் பல மாநிலத்தில் இருந்தும் வந்தன.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் தமிழகத்தில் அதிரடி சோதனைக்கு தயாரானர்கள்.
நேற்று அவர்கள் சென்னை கோயம்பேடு ஜேஏ என்ஜினீயரிங் கல்லூரி, அடையாளம்பட்டு பிஎம்ஆர் என்ஜினீயரிங் கல்லூரி, ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள விகேகே விஜயன் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் நாகர்கோவில் சன் என்ஜினீயரிங் கல்லூரிகள் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டது.
மேலும், கல்லூரி நிர்வாகத்தினரின் வீடுகள், அவர்கள் நடத்தும் அறக்கட்டளை ஆகிய இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அதிகாரிகள் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதையடுத்து கல்லூரி நிர்வாகிகளின் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த சோதனையில் ஒரு கல்லூரியில் கல்லூரி முதல்வர் பி.எச்.டி முடித்துள்ளதாக போடப்பட்டுள்ளது. ஆனால், அவரிடம் அதற்கான சான்றிதழே இல்லை. இதே போன்று பல முறைகேடுகள் கல்லூரிகளில் செய்யப்பட்டுள்ளன என சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இந்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகளுக்கு சொந்தமான மும்பை, புனே, மைசூர் நகரங்களில் உள்ள வீடுகளிலும் அதிரடி சோதனை நடந்தது.
நிபுணர்குழு பரிந்துரை இல்லாமலேயே நான்கு கல்லூரிகளும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அனுமதி பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து தற்போது இந்த கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ள அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தெரிகிறது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மன்னர் ஜவஹர் கூறுகையில், ஏஐசிடிஇ அனுமதி ரத்தானால், அண்ணா பல்கலைக்கழகம் வழங்கிய அங்கீகாரமும் ரத்தாகிவிடும் என்றார்.