நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது
நாகர்கோவில்: நாகர்கோவிலில் வேலைமுடித்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த இளம்பெண்ணை, மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் கட்டிபிடித்து முத்தம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.
நாகர்கோவிலில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் இளம்பெண் ஒருவர் வேலை முடிந்து நேற்று இரவு சுமார் 9 மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டார்.
அவர் மணிமேடை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென 33 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை வழிமறித்து கட்டிபிடித்து முத்தமழை பொழிந்தார்.
இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் வாலிபரின் பிடியில் இருந்து திமிர முயற்சித்தார். ஆனால், முடியவில்லை. இதையடுத்து அருகிலிருந்தவர்களை காப்பாற்றுமாறு கூறி கூச்சலிட்டார். இதையடுத்து அந்த பக்கமாக போனவர்கள் வாலிபரின் பிடியில் இருந்து அந்த பெண்ணை மீட்டனர்.
பின்னர் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து கோட்டார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அப்போது தனது பெயர் ராதாகிருஷ்ணன் என்றும் போலீஸ் ஜஜி என்று கூறி போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், எனது சொந்த ஊர் கல்லாக்குழி, இப்போது வெட்டுக் கோணத்தில் இருக்கிறேன். தச்சு தொழில் செய்து வருகிறேன். இப்போது ஜஜி பதவி தருகிறேன் என்று கூறி இருக்கிறார்கள்.
இது தொடர்பாக எஸ்பி என்னை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். பணி ஆர்டர் இன்னும் கைக்கு வரவில்லை. வந்தபின் உங்களை கவனித்துக் கொள்கிறேன் எனறார். அதன் பின்னர் தான் போலீசாருக்கு அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அதற்கு மேல் அவரிடம் விசாரணை நடத்தாமல் அவர் கூறிய முகவரிக்கு தகவல் தெரிவித்தனர். ராதாகிருஷ்ணனுக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், அவர் மனைவி வங்கியில் பணியாற்றி வருவதும் தெரிந்தது. ராதாகிருஷ்ணன் கடந்த சில காலமாக இதுபோல் மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிய வந்தது.