இந்திய பூசாரிகளை நிர்வாணமாக்கி சித்வரதை-இந்தியா கண்டனம்
பெங்களூர்: நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் கோவிலில் பூஜையில் ஈடுபட்ட இரண்டு இந்திய தலைமை பூசாரிகளை மாவோயிஸ்ட் கட்சியினர் நிர்வாணமாக்கி சித்ரவதை செய்தது கண்டனத்துக்குரியது. இது குற்றச் செயல் என்று இந்தியா கூறியுள்ளது.
நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் கோவில் 5ம் நூற்றாண்டை சேர்ந்தது. கடந்த 800 ஆண்டுகளாக இந்த கோயிலில் தென் இந்தியாவை சேர்ந்தவர்களே தலைமை பூசாரிகளாக இருந்து வருகின்றனர்.
இதற்கு அங்குள்ள மாவோயிஸ்ட்கள் கடு்ம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் இந்திய பூசாரிகள் பூஜை செய்வதை அனுமதிக்க கூடாது என கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 1.30 மணிக்கு கோவிலுக்கு நுழைந்த சுமார் 40 முதல் 50 மாவோயிஸ்ட்கள் அங்கிருந்த தலைமை பூசாரி அறைக்குள் நுழைந்தனர். அவர்கள் மதிய பூஜை ஏற்பாடுகளை கவனித்து கொண்டிருந்த இந்திய பூசாரிகள் கிரிஷ் பட் மற்றும் ராகவேந்திர பட் (கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள்) ஆகியோரை தாக்கியுள்ளனர்.
அவர்களது உடைகளையும் கிழித்து, நிர்வாணமாக்கி சித்ரவதை செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து நேற்று பெங்களூரில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா கூறுகையில்,
நேபாள அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். பசுபதிநாதர் கோவில் வளர்ச்சி அறக்கட்டளையினருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். அவர்கள் கோவிலை சுற்றி கூடுதல் பாதுகாப்பு போட்டிருப்பதாக தெரிவித்தனர். பூசாரிகளுக்கும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
பூசாரிகளைத் தாக்கியது, சித்திரவதை செய்துத கிரிமினல் குற்றமாகும். இந்தியாவுக்கும், நேபாளத்திற்கும் இடையே நீண்ட நெடுங்காலமாக நிலவி வரும் உறவுகளை சீர்குலைக்கும் வகையிலான செயல் இது.
நேபாளம் இறையாண்மை பெற்ற நாடு. இந்த சம்பவத்தைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை அது எடுக்கும், இருநாட்டு உறவுகளையும் பாதுகாக்கும் என நம்புகிறோம்.
இரு நாடுளுக்கும் இடையிலான உறவு வரலாற்றுப் பூர்வமானது. காசியில் நேபாள பூசாரிகள் பூஜைகளில் ஈடுபடுகிறார்கள். அதேபோல பசுபதிநாத் கோவிலில் இந்திய பூஜாரிகள் ஈடுபடுகின்றனர். இது பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் மரபு.
இந்திய பூஜாரிகள் நேபாளத்தில் பூஜைகளில் ஈடுபடக் கூடாது என்று மாவோயிஸ்டுகள்தான் கூறி வருகின்றனர். இதில் நேபாள அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றார் கிருஷ்ணா.
இந்நிலையில் இந்த பிரச்சனை தொடர்பாக இந்திய தூதர் ராகேஸ் சுட், நேபாள பிரதமர் பிம் பகதூர் ராவல் மற்றும் கலாச்சார துறை அமைச்சர் சரத் சிங் பண்டாரி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நேபாள பிரதமர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாக நேபாளத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.