ரெட்டி ஹெலிகாப்டர் விபத்து-விசாரணை துவங்கியது
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி விபத்தில் பலியான சம்பவம் குறித்த விசாரணை இன்று துவங்குகிறது.
கடந்த 2ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மற்றும் அவருடன் சென்ற நான்கு பேரும் பலியானார்கள்.
இந்த விபத்து தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்த சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) விசாரணை கமிட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இதன் தலைவராக பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் நிறுவனத்தின் தலைவர் ஆர்கே தியாகி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ஆந்திர போலீசார் மற்றும் விமான போக்குவரத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணையை துவக்கினர்.
இந்த வழக்க்கில் நல்லமலா காட்டுபகுதியில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர் பாகங்களை ஆந்திரா சிபிஐ அதிகாரிகள் கர்னூல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
இது குறித்து கர்னூல் மாவட்ட கலெக்டர் முகேஷ் குமார் கூறுகையில்,
ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் டிஜிசிஏயை சேர்ந்த விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. அவர்கள் இன்னும் இரண்டு நாட்களில் விபத்து நடந்த இடத்துக்கு சென்று மேலும் சில ஆய்வுகள் செய்யவிருக்கின்றனர்.
கர்னூல் மாவட்ட நிர்வாகம் தங்கள் வசம் இருந்த கருப்பு பெட்டியை விசாரணை குழுவிடம் நேற்று முன்தினம் ஒப்படைத்துவிட்டது. அவர்கள் அதை டெல்லிக்கு எடுத்து சென்று அதிலிருக்கும் தகவல்களை வெளி கொண்டு வரவிருக்கின்றனர்.
அதேபோல் எமர்ஜென்சி லொகேடர் டிரான்ஸ்மிட்டர் என்ற முக்கிய சாதனமும் அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்து நடந்த இடத்தில் விமானம் தொடர்பான ஆவணம், புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை டிஜிசிஏ குழுவிடம் கொடுக்கவிருக்கிறோம். இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையும் அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த மலை பகுதியை போலீசார் மற்றும் மாவோயிஸ்ட்க்கு எதிரான படைகள் பாதுகாத்து வருகின்றன.
இந்த வழக்கு தொடர்பாக ஆத்மகூர் காவல் நிலையத்தில் 174வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.