வானிலை மோசம் - ஹெலிகாப்டரில் ஏற மறுத்த லாலு, பஸ்வான்
டெல்லி: ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் லோக் ஜன சக்தி தலைவர் பாஸ்வான் இருவரும் மழை பெய்ததால் ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து விட்டனர். ஒன்றும் ஆகாது என்று விமானி எவ்வளவோ கேட்டு கொண்ட போதும் ஒரேடியாக மறுத்துவிட்டனர்.
எல்லாம் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தால் ஏற்பட்ட பீதிதான் காரணம்.
லாலு பிரசாத் யாதவுக்கு ஹெலிகாப்டரில் செல்வது என்றால் அலாதிப் பிரியம். ஏதோ சைக்கிளில் செல்வதைப் போல படு குஷியாக செல்வார் லாலு.
அதேபோல நினைத்த இடத்தில் ஹெலிகாப்டரை இறங்கவும் சொல்வார். கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தேசிய நெடுஞ்சாலையில் ஹெலிகாப்டரை இறக்கி சர்ச்சையில் சிக்கி கொண்டார்.
அதேபோல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜார்க்கண்டில் நடந்த தேர்தல் கூட்டத்தின் போது மேடைக்கு அருகில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் உடனடியாக விடுவிக்கப்பட்டார்.
இப்படி பல சர்ச்சைகள் வந்த போதும் ஹெலிகாப்டர் பயணத்தை விடாது தொடர்ந்த லாலு பிரசாத் யாதவ், ஆந்திர முதல்வர் ரெட்டியின் மரணத்துக்கு பின் ஆளே மாறி போயுள்ளார்.
நேற்று அவரும், பாஸ்வானும் பாட்னாவிலிருநது சபஷ்டிபூர் என்ற இடத்திற்கு ஹெலிகாப்டரில் சென்றனர்.
செல்வதற்கு முன்பு ஹெலிகாப்டர் நல்ல கண்டிஷனில் இருக்கிறதா என்பதை பார்க்குமாறு லாலு வலியுறுத்தினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர் அக்கறையுடன் கேட்டறிந்தார்.
பின்னர் பைலட்டைப் பார்த்து, நீங்கள் சொல்வது போல கேட்டுக் கொள்கிறேன் என்றும் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களைப் பார்த்து, பாதுகாப்பு எச்சரிக்கைகளை அரசியல்வாதிகளான நாங்கள் எப்போதுமே கேட்டுக் கொள்வதில்லை. பைலட் சொல்வது தவறு என்று நாங்களாகவே நினைத்துக் கொள்வதுண்டு. அதுபோன்ற சமயங்களில் நாங்கள் சொல்வது விதிமுறைகளுக்குப் புறம்பானதாக இருந்தால் நிச்சயம் பைலட்டுகள் ஹெலிகாப்டர்களை இயக்க முடியாது என்று உறுதியுடன் கூறி விட வேண்டும் என்றார்.
பின்னர் ஹெலிகாப்டரில் சபஷ்டிபூர் சென்றார் லாலு. பொது கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது மழை பெய்தது. இதையடுத்து ஹெலிகாப்டர் விமானி லாலுவை தொடர்பு கொண்டு வானிலை மேலும் மோசமாகும் முன் பாட்னா திரும்பி விடலாம் என கூறியுள்ளார்.
ஆனால் லாலு விடாப்பிடியாக மறுத்துவிட்டார். மழை சுத்தமாக நின்ற பின்னர் தான் போக வேண்டும் என கூறிவிட்டார். ஆனால், இதற்கு மேல் தாமதித்தால் ஹெலிகாப்டரை பாட்னா கொண்டு செல்ல முடியாது என்பதால் விமானி அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார்.
லாலுவும், பாஸ்வானும் கார் மூலம் பாட்னா போய் சேர்ந்தனர்.