ராஜபக்சேவுடன் நாளை சம்பந்தன் குழு சந்திப்பு
கொழும்பு: தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான 7 பேர் குழு நாளை ராஜபக்சேவை சந்திக்கவுள்ளனர்.
சம்பந்தன் தலைமையிலான இக்குழுவில், இலங்கை தமிழரசு கட்சியின் மாவை சேனாதிராஜா, ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் சுரேஸ் பிரேமச்சந்திரன், டெலோவின் என்.ஸ்ரீகாந்தா, எம்.பிக்கள் தங்கேஸ்வரி கதிர்காமர், சிவசக்தி ஆனந்தன் மற்றும் ஐ.எம்.இமாம் ஆகியோரும் இடம் பெறுகின்றனர்.
ராஜபக்சேவுடன் பேச வேண்டிய விஷயம் குறித்து இந்தக் குழு கூடி ஆலோசித்துள்ளது. அரசியல் தீர்வு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ராஜபக்சேவுடன் இக்குழு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
விடுதலைப் புலிகளுடனான போருக்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களோடு ராஜபக்சே சந்திக்கவிருப்பது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜபக்சே சகோதரர்களுக்கு டாக்டர் பட்டம்
இதற்கிடையே, கொழும்பு பல்கலைக்கழகம், ராஜபக்சே மற்றும் அவரது தம்பி கோத்தபயாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.
நாட்டின் இறையாணமை, ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்து, அனைத்து சமூகங்களுக்கு மத்தியிலும் அமைதியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தி, அனைத்துலக சமூகத்தின் மத்தியில் இலங்கையின் பெருமையை உயர்த்தியமைக்காக இந்த கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறதாம்.